இதை எப்படிப் பக்குவப்படுத்தி உண்டாலும், ஏதேனும் பயன் தரும். வெந்த + அயம் என்ற பெயரிலேயே “அயம்” இரும்புச் சத்துத் தரவல்லது என்பதனை எளிதில் அறியலாம்.
இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை அந்த நீரைப் பருகி வரலாம். குழ்ம்பாகச் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரையை வெவ்வேறு பக்குவங்களில் செய்தும் உண்ணலாம். வெறும் வெந்தயத்தை வாயிலிட்டு மென்று தண்ணீர் குடிக்கலாம்.
சில முறைகளில் சரிவிகிதமும் சிலமுறைகளில் சதவீதமும் இதன் சத்து உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால் முழுமையாக இதன் பயனை அடைய விரும்புவோர் கீழ்க்காணும் முறையில் அணியப்படுத்திக் கொள்வதே சிறந்தது.
ஒரு பருத்தித் துணியினால் வேண்டிய அளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, கட்டுச் சோறு கட்டுவது போல குறுகலாக கட்டாமல், தொட்டில் சீலை போல தலைப்புப் பகுதியில் நான்கு, ஐந்து விரலிடை தளர்ச்சியாக விட்டுக் கட்டி, முதல் னால் இரவு அதைத் தண்ணீரினுள் போட்டு வைத்திருந்து, மறுநாள் அதை எடுத்து இயன்றளவு அதிலுள்ள தண்ணீரை வடியச் செய்து கொண்டு, ஒரு மூடியுள்ள பாத்திரத்தில், காற்றும் – வெளிச்சமும், கிடைக்காதபடி மூடி வைத்து, ஒரு மணி நேரமாவது ஒரு மூட்டம் கொடுத்து, அதன் பின், வீட்டில் நிழலில் ஒரு பிரம்பு (மூங்கில்) கூடை ஒன்றின் மீது தண்ணீர் வடியக் கூடியதுமான ஒரு பருத்தித் துணியை விரித்துக் கொண்டு அதன் மீது பக்குவப்படுத்தி வைத்திருக்கும் வெந்தயத்தை விதை தெளிப்பதைப் போல பரவலாகத் தூவி விடுங்கள். நான்கு நாட்களில் முளை அரும்பிய பின் – காலை வேளை வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு தேக்கரண்டி மென்று, தின்று தண்ணீர் குடித்து வாருங்கள்.